articles

img

தக்காளி யுகம் ஈரோடு தமிழன்பன்

மாகாளி, பத்திரகாளி நினைத்தெல்லாம்

அஞ்சாத மக்கள்

தக்காளியின் சிவந்த

முகம்கண்டு கதி

கலங்கிக் கிடக்கின்றனர்

 தாவர வர்க்கத்தில்

தக்காளி தாவித்தொட்ட

உச்சம் பூவுலகில் எதுபெற்றது?

உள்ளிருக்கும்

விதைகளிலும்

பெருமையும் பெருமிதமும்

கோலோச்சுகின்ற காலம்இது.

கெஞ்சும் குழம்புக்குக்

கொஞ்சமும் இறங்காது

என்றால் தஞ்சம்அடைந்த

மிளகுச்சாறு தயவுபெற ஏதுவழி?

தக்காளிப்பழமேந்திச்

சரக்குவண்டி வருகின்ற

வழியெல்லாம் ஆரத்தி

எடுப்பதற்கு ஆயிரமாய்

மக்கள் கூட்டம்.

படிப்பாளிகள் அறிவாளிகள் நடத்தும்  

கருத்தரங்கில் தக்காளிக்குத்

தனிஅமர்வு தலைமைக்குப்

பப்பாளிக்குலத்தின்  

விருதுபெற்ற மூத்த படைப்பாளி!

தக்காளியை நறுக்கும்

கத்திகள்கண்டு தங்கத்தை

உருக்கும் தணல்

மனத்தில் வெட்கத் தவிப்புகள்

 தக்காளி உள்ளறையில்

ஒருவிதையாய் அமர

வாய்ப்புக் கேட்டு வைரவகையறாக்கள்

கோரிக்கை வைக்கின்றன.

திருமண மண்டபங்களில்

மணமக்களுக்குப் பையில்

போட்டுக்கொடுக்கும் பரிசு

தக்காளிப்பழம்தான்!  

கவிஞர்கள் பேச்சாளர்கள்

பொன்னாடை பயனாடைக்குப் பதிலாகக்

கேட்பதுகூடப் பத்துத் தக்காளிப்பழங்களே!

இனி என்ன?

தூய்மை இந்தியா!

எண்ம இந்தியா!

ஒரே இந்தியா!  

வரிசையில் தக்காளி

இந்தியாவை உருவாக்குவோம்

ஓயமாட்டோம் அதுவரை!